Wednesday, May 16, 2018

வண்ணதாசன்

நான் யார்மீதாவது விமர்சனம் வைத்துக்கொண்டே இருக்கிறேன் என்பது என்மீதான குற்றச்சாட்டு. 'You are a man of negativity', என்று என்மீது விமர்சனம் வைக்கும் அளவுக்கு எனது விமர்சனங்கள் அளவுகடந்து போய் இருக்கின்றன என்பதைப்புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல் குறித்து அதிகம் பேசுவதால் விமர்சனங்கள் இன்றியமையாததாக அமைந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.

'ஏதாவது ரசனையோடு எழுது', என்பது நண்பர்கள் சிலர் என்னிடம் வைக்கும் கோரிக்கை. ரசனை என்றவுடன் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் 'வண்ணதாசன்'. வண்ணதாசன் என்கிற பெயரில் கதைகளும் கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகளும் எழுதிவரும் தமிழின் மூத்த எழுத்தாளர். முதன்முதலில் வண்ணதாசனை/கல்யாண்ஜியை வாசித்தது எஸ்.ராமக்கிருஷ்ணனின் ஏதோ ஒரு கட்டுரைத் தொகுப்பில். கதாவிலாசமா தேசாந்திரியா என்று நினைவில்லை.

கூண்டுக்கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக்கிளிக்கு
எதற்கு
எப்படி வந்தன
சிறகுகள்?

என்பது அந்தக் கவிதை. ஒரு கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றிருந்தது. மிக மிக எளிமையான அதேசமயம் பொருள் பொதிந்த கவிதை. கவிதையின் பிரம்மிப்பு அடங்கவே எனக்கு சில நிமிடங்கள் பிடித்தது.

ஃபேஸ்புக்கில் நிறைய எழுதுகிறார். ஒவ்வொன்றையும் வாசிக்கும்போதுமனம் இலேசானதொரு உணர்வு. வன்மம், குரூரம் நிறைந்து கிடக்கும் படைப்புகளின் மத்தியில் துயரங்களைக்கூட கலாரசனையோடு சொல்வதென்பது அவரது தனித்துவம்.

எனக்கு ஓர் ஆசை. இவர் எப்படி ஒவ்வொரு விசயங்களையும் கவனிக்கிறார். அவற்றை எப்படி எழுத்தாக மாற்றுகிறார் என்பதை அருகில் இருந்து பார்க்க வேண்டுமென்பதுதான் அது. அவரது ரசனைக்கு இன்னோர் உதாரணம்...

//
ஒரு பெயர் தானே வேண்டும்.

கலைச் செல்வி என்று வைத்துக் கொள்ளலாம். கலைச் செல்வியையும் அவர் கணவரையும் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு  நிறைவும் மகிழ்வும் மிக்க நிகழ்வில் சந்தித்தேன்.

கலைச்செல்வி அவருடைய முப்பதுகளில் எப்படிச் சிரித்தபடியே இருந்தாரோ, அதற்கு இம்மியும் குறையாத சிரிப்புடன் அவருடைய ஐம்பதுகளிலும் இருக்கிறார். நதியில் அள்ளிய தண்ணீரை, அள்ளிய கணமே நதி நிரப்பி விடுவது போல, ஒரு சிரிப்பின் மேல் மறு சிரிப்பு, ஒரு மலர்ச்சியின் மேல் இன்னொரு மலர்ச்சியை வைத்து அந்த முகம் சதா தன்னை நிரப்பி, அதைப் பார்க்கிற முகத்தையும் நிரப்பிக் கொண்டது.

கிட்டத்தட்ட,இருபத்தேழு வருடங்களாகப் பார்க்கிற ஒரு பெண்ணின் முகம் எப்படி இப்படி ஒரு அழியாச் சுடரோடு ஒளிர முடிகிறது! அன்றாடங்களின் நோவு, வாழ்வு சார்ந்த வாதை அவருக்கு இல்லாமலா போகும்?

இது ஒரு வரமல்ல. வல்லமை. கலைச்செல்வியின் முகம் என, என் மனைவி முகம், எங்கள் மகள் முகம், ஏன் என் முகம் , உங்கள் முகம் அனைத்தும் எப்போதும் சிரிப்பு ஒளிர வாழும் அந்த வல்லமை அடைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
//

இங்கே 'நதியில் அள்ளிய தண்ணீரை, அள்ளிய கணமே நதி நிரப்பி விடுவது போல' என்கிற வரியை ஒரு நான்கைந்து முறை வாசித்திருப்பேன். இந்த நிகழ்விற்கு இதை விடச் சிறந்த எளிய உதாரணம் கொடுத்துவிட முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். என் சிந்தைக்கு எட்டவில்லை.

சமீபத்தில் ஒருவர் தனது கட்டுரையில் அழகுக்கு உவமை சொல்ல 'வண்ணதாசன் வரிகள்' என்று குறிப்பிட்டிருந்தார். வாசித்ததும் அனிச்சையாய் எனது முகத்தில் மலர்ச்சி. வண்ணங்களை அழகியலோடு தொடர்புபடுத்தலாம். சரியான பெயரைத்தான் தனக்கு தேர்வு செய்திருக்கிறார், 'வண்ணதாசன்'.

No comments:

Post a Comment