Tuesday, September 18, 2018

பிளாட்டோவின் பொய்த்தேவு

பொய்த்தேவு என்கிற நாவலில் சோமு என்கிற சிறுவன் தன்னிடம் ஒரு ரூபாய் (எவ்வளவு என்று சரியாக நினைவில்லை) இருந்தால் இந்த உலகத்தையே வாங்கிவிடலாம் என்று நினைக்கிறான். அப்படித் தொடங்கும் உலகத்தின் மீதான அவனது பார்வை சோமு பண்டாரமாக சாகும்போது எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதுதான் கதை. 

பிளாட்டோவின் குகை மனிதனை இதனோடு தொடர்பு படுத்தலாம். குகையே உலகம் என்று நினைப்பவனுக்கு வெளியே வந்தால் அவனது பார்வை மாறுபடும். இப்படித்தான் பூமி தட்டையானது என்று நினைத்தவனுக்கு போகப் போக உலகத்தின்மீதும் பிரபஞ்சத்தின் மீதும் பார்வை மாறிக் கொண்டே வந்தது.  இதற்கெல்லாம் ஆதாரம் தேடல். 'Ascent of a man is because of his curiosity',  என்று கமல் இதைச் சுருக்கமாகச் சொல்வார்.

இது அறிவியலுக்கு மட்டுமல்ல; மனித நாகரிக வளர்ச்சிக்கும் பொருந்தும். ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமே இப்படியெனில் தனிமனிதனுக்கு? 'Civilization should evolve from the beginning',  என்பார் தோழி ஒருவர். மனித நாகரிகம் தவறுகளை சரியாகவோ தவறாகவோ திருத்தியெழுதி எழுதி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. ஒட்டுமொத்த தவறுகளையும் திருத்த ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது அவரது எண்ணம். இத்தனைக்கும் அவர் பெரிதாக வாசிப்பனுபவமோ அரசியல் ஞானமோ இல்லாதவர்தான். 

ஆரம்ப காலத்தில் ராமசாமி நாயக்கர் என்று பெயரை எழுதி வந்தவர் பின்னர் சாதி ஒழிப்புக்காக சாகும்வரை போராடினார், 'God doesn't play dice ', என்று சொன்னவர் வேறு வழியில்லாமல்  குவாண்டம் தியரியை ஏற்றுக் கொண்டார். இப்போதிருக்கும் கோட்பாடுகள் காலப் போக்கில் நிரூபிக்கப்படலாம்; அல்லது புறக்கணிக்கப்படலாம். அறிவியலுக்கே இப்படியெனும்போது சமூகவியல் கோட்பாடுகளுக்கு? 

புத்தகத்தின் மூலமாக ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் வரலாறைத் துல்லியமாக அறிந்துவிட முடியாது. நம் நாட்டினரே காந்தியின் போராட்ட முறைகளை விமர்சிக்கும்போது மார்டின் லூதர் கிங்கும், மண்டேலாவும் அதனை முன்மாதிரியாகக் கொண்டு வெற்றி கொண்டார்கள். அம்பேத்கரும் பெரியாரும் மட்டும்தான் சமூக சீர்த்தவாதிகள் என்போர் ராம் மோகன் ராய் செய்த சீர்திருத்தங்கள் குறித்து தெரியாமல் இருப்பதோ அல்லது அவரைப் புறக்கணிப்பதோ அவர்களது புறச்சூழல் காரணமாகத்தான். 

கல்லாதது உலகளவு என்கிற அதே சமயத்தில் கற்றவையெல்லாம் சரிதானா என்கிற மறுபரிசீலனையும் தேவைப்படுகிறது. சரி-தவறு என்பதே காலத்திற்கும் இடத்திற்கும் மாறுபடும் எனும்போது இந்தப் பிரபஞ்சத்தை உங்களது ஒற்றைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் என்ன நியாயம்?

No comments:

Post a Comment