கருப்புமில்லை, செகப்புமில்லை; ஒருவித செம்பு நிறம் அவள். செம்பட்டை நிறக் கூந்தல். மேலுதட்டின் மேல் வலப்பக்கமாக மச்சம். 'சிம்ரன்' என்பது அந்தப் பகுதி விடலைப் பையன்கள் அவளுக்கு வைத்த பெயர்.
கருமாரி என்பது அவளது இயற்பெயர் என்றாலும் கூப்பன்கடை கார்டிலும் பீடிக்கடை சிட்டையிலும் தவிர மற்ற இடங்களில் அவளது பெயருக்குப் பெரிதாக வேலை இருக்கவில்லை. பள்ளிக்கூடத்தையும் ஆறாம் வகுப்போடு நிறுத்திவிட்டதால் பாடநோட்டில் எழுதவேண்டிய அவசியமும் இல்லாமல் போனது. அவளது அம்மா 'ஏட்டி! பெரியவளே!', என்றுதான் விழிப்பாள். அப்பா தவறிவிட்டார். 'எக்கோவ்!', என்று பின்னாடியே சுற்றிவரும் தம்பி மாணிக்கம் என்றால் அவளுக்குப் பிரியம். ரெண்டாப்பு படிக்கிறான்.
அவர்கள் இருந்த காம்பவுண்டில் குருவிக்கூடுகள் போன்று வீடுகள். மூன்றுபக்கமும் வீடுகளாக நடுவில் பொதுவானதொரு முற்றம். ஈசானி மூலையில் வடப்பக்கம் பார்த்து பொதுவாசல். ஒரேஒரு அறைதான். பெட்ரூம், லிவிங் ரூம், டைனிங் எல்லாம் அங்குதான். காம்பவுண்டின் மேல்பக்கமாக பொது சமையலறை. அவரவர் வசதிக்கேற்ப விறகடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு என விரிசையாக இருக்கும். தென்மேற்கு மூலையில் கொல்லைப்புற வாசல். பின்புறமாக தட்டி கட்டிவிடப்பட்ட குளியலறைகள். கொல்லைக்குப் போக செங்கமாலுக்குப் பக்கம் இருக்கும் முட்புதர்களை ஆளுக்கொரு பக்கமாய் ஆண்களும் பெண்களும் பிரித்து வைத்திருந்தார்கள்.
ரேடியாவில் காலையிலேயே அவளுக்குப் பிடித்த காதல்கோட்டை படத்தின் 'நலம்! நலமறிய ஆவல்' பாட்டு பாடிக் கொண்டிருந்தது. அவளும் கூட சேர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். மண்ணெண்ணெய் அளவு குறைந்துபோனதால், தண்ணீர் ஊற்றி தண்ணீரின் அடர்த்திக்கும் மண்ணெண்ணெயின் அடர்த்திக்குமான வித்தியாசதால் மண்ணெண்ணெயை பாட்டிலின் மேலே உயர்த்தி, மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளித்து எரிந்து கொண்டிருக்கும் குவார்ட்டர் பாட்டிலில் செய்த விளக்கை அணைத்தாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் தம்பியை எழுப்பிவிட்டாள். அசதியில் தலையணையை எச்சிலால் நனைத்திருந்தான். வாயைத் துடைத்துக்கொண்டு எங்கே இருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாது விழித்தவனை, "ஏலேய்! போய் ரெண்டு சில்லு தேங்காவும், ரெண்டு ரூவாய்க்கு பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா! சட்னி அரைக்கணும்", என்று உத்தரவிட்டாள்.
கலைந்த தலையோடும், பூழை நிறைந்த கண்களோடும் பெட்டியலிருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு மணி அண்ணன் கடைக்கு நடந்தான். "ஏலேய்! மூஞ்சி கழுவிட்டுப் போ'ல", என்றாள். கொல்லைப்பக்கம் போய் வாளியில் இருந்த நீரை எடுத்து மூஞ்சைக் கழுவி வாய் கொப்பளித்துக் கொண்டான். இரவில் குளிர் என்பதால் பள்ளிக்கூட சட்டையோடு தூங்கிவிட்டான். இந்த வருடம் இரண்டு வெள்ளை சட்டைகளும் இரண்டு காக்கி டவுசர்களும் கொடுத்திருந்தார்கள். இது சென்ற வருடம் கொடுத்த சட்டை. செம்மண் நிறமேறிப் போயிருந்த சட்டையில் அப்படியே மூஞ்சைத் துடைத்துக் கொண்டு கிளம்பினான்.
மாணிக்கம் கடையை நோக்கி நடந்து வருவதை, கடைக்கு வெளியே நின்று பீடி குடித்துக் கொண்டிருந்த கோவிந்தன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைக்கு வந்ததும் "ரெண்டு ரூவாய்க்கு பொட்டுக்கடலை, ரெண்டு சில்லு தேங்கா", என்றான். மணியண்ணன் தேங்காய் சில்லு கீறிக் கொண்டிருந்தார். "ஏலே மாணிக்கம்! உங்க அக்கா சிம்ரன எங்க'ல? வீட்டை விட்டு வெளிய வரமாட்டாளோ?", என்றான் கோவிந்தன்.
கோவிந்தனை மாணிக்கத்துக்குச் சுத்தமாகப் பிடிக்காது. மாணிக்கம் சிம்ரனைப் போல அஜித் ரசிகன்; கோவிந்தன் விஜய் ரசிகன். வாடகை ஆட்டோ ஓட்டுகிறான். கோவில் கொடை, கல்யாணவீடு, சடங்கு வீடு என எல்லா இடங்களிலும் மைக் செட் கட்டும்போது முதல் ஆளாக வந்துவிடுவான் கோவிந்தன். 'நான் உங்க இளைய தளபதி விஜய் பேசுறேன்', என்று விஜயின் குரலோடு தொடங்கும் ஃப்ரெண்ட்ஸ் படத்தின் பாடல்களோடுதான் எல்லா விழாக்களும் தொடங்கும். அவனோடு இன்னும் சிலர் கூட்டு. கோயில் கொடையில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் விஜய் பாடல்களுக்கு ஆடுபவர்களுக்கு மட்டும் மேடையேறிப் போய் ரூபாய்நோட்டு குத்துவார்கள். மாணிக்கமும், சிம்ரனும் தண்ணிநடை எடுக்கச் செல்லும் போது ஆட்டோவை வேகமாக வளைத்து ஓட்டிச் சாகசம் செய்வான். மாணிக்கத்துக்கு எரிச்சலாக இருக்கும். கோவிந்தனும் சிம்ரனும் காதல் செய்கிறார்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். மாணிக்கத்திடமே அவன் ஒருமுறை லெட்டர் கொடுத்து கொடுக்கச் சொன்னான்; "அக்கா வை'வா", என்று வாங்கிக் கொள்ளாமல் ஓடிவிட்டான்.
"வீட்லதான் இருக்கா. தோசை சுட்டுட்டு இருக்கா", என்றான் கடுப்பு கலந்த குரலில்.
"இனிமே எதுவும் வாங்கணும்னா அவளையே வரச் சொல்லு", என்றான் கோவிந்தன்.
"ஏலே! சும்மா இரு. அவன் போய் அவன் ஆத்தாகிட்ட சொல்லிரப் போறான். அவ ஆத்தா இங்க கடைக்கு முன்னாடி வந்து சாமியாடிருவா", என்ற மணியண்ணன், "நாலு ரூவா கொடு", என்று சொல்லி மாணிக்கத்திடம் வாங்கிக் கொண்டார்.
பொட்டுக்கடலையும், தேங்காயும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகையில் வீட்டு வாசலில் சிம்ரன் மீன்காரியிடம் மீன் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும், "இரு'க்கா! என் தம்பிட்ட கேப்போம்", என்றவள் இவனைப் பார்த்து, "ஏலே! என்ன மீனு வாங்கட்டும் மதியான சோத்துக்கு", என்றாள்.
"முள்ளு இல்லாத மீனா வாங்கு", என்றான்.
"முள்ளு இல்லாம எந்த மீனு நட்டமா நிக்கும். முள்ளு இல்லாம நட்டமா நிக்குற மீனு உங்கிட்ட தான இருக்கு", என்று கேலியாகச் சிரித்தாள் மீன்காரி. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"எக்கா! சின்னப் பையன்கிட்ட என்ன பேசுத? சும்மா இரு", என்று அதட்டியவள், "நீ போய் பல்லு விலக்கிட்டு வா", என்றாள்.
பல் விலக்கிவிட்டு தோசையைத் தின்றுவிட்டு விளையாடக் கிளம்பினான். காட்டுக்கு சென்றிருந்த அம்மா வந்துவிட்டாள். "எலே! எங்க போற?", என்றாள் இவனைப் பார்த்ததும்.
"விளையாட", என்றான்.
"ஊர்ல இருக்க *** பைய **பைய கூட எல்லாம் கூட்டு சேந்து சுத்திட்டு இரு நீ. ஊர்ல இல்லாத சேக்காளிங்க வச்சுகிட்டு சுத்துதான் பாரு வெக்கங்கெட்ட பய", என்றாள் அம்மா குருவம்மாள்.
***
அக்கா பீடி சுற்றுவாள். கட்டு இலையைப் பிரித்து இரும்பிப் பட்டையின் அளவுக்கு வெட்டி பீடித்தூள் போட்டு சுருட்டி நூல் வைத்து கட்டுவாள். பின்னர் குட்டி ஈட்டியை வைத்து திறந்திருக்கும் முனையை குத்திக் குத்தி மூடுவாள். கட்டுக்கு இத்தனை பீடி என்று அடுக்கிக் கட்டி, பீடிக்கட்டுகளை பீடிக்கடையில் கொண்டுசென்று கொடுத்துவிட்டு சிட்டையில் கணக்கு எழுதிவிட்டு வருவாள்.
அவள் கட்டும் பீடியில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து ரஜினி மாதிரியாக வாய்க்குள் கொண்டு சென்று மீண்டும் வெளிக் கொணர்ந்து ஸ்டைல் செய்வான். ஒருமுறை இதைப்பார்த்து விட்ட சிம்ரன் புளிமரத்தின் குச்சியை உடைத்து முதுகில் தோலுரித்துவிட்டாள். " இனி பீடிய தொட்ட கொன்னுருவேம்ல உன்ன", என்று எச்சரித்து விட்டாள். கோவிந்தன் பீடி பற்ற வைத்தே குடிக்கிறான்; அவனையெல்லாம் அவளுக்குப் பிடிக்கிறது. நான் சும்மா ஸ்டைல் செய்தாலே அடிக்கிறாள் என்று கோபித்துக் கொண்டான்.
***
ஒருநாள் குருவம்மாள் தெருவெல்லாம் கத்திக் கொண்டு வந்தாள்.
"இந்தத் தேவிடியா முண்டையால என் மானம் மருவாதி எல்லாம் போச்சு. என் வயித்துல பொறந்தது இப்படி அரிப்பெடுத்து திரிஞ்சு இருக்கே! அந்த பலவோட்ரை பயகிட்ட என்னத்த கண்டாளோ? அவன் பின்னாடி போய் இருக்காளே!", என்று கத்திக் கொண்டே வீட்டுக்கு வந்தவள் அழுது கொண்டிருந்த கருமாரியை முடியைப் பிடித்து இழுத்துப் போட்டு அடித்தாள். செய்வதறியாமல் அழுது கொண்டிருந்தான் மாணிக்கம்.
ஊர்ப் பெரிய மனுசன்கள் நாட்டாமை வீட்டுக்கு முன்பு ஒன்று கூடினார்கள். வெள்ளை வேட்டி ஒன்று இருந்தால் யார் வேண்டுமானாலும் ஊர்ப் பெரிய மனுசனாகி நியாயம் பேசலாம். குருவம்மாள் குடும்பத்தில் அப்படி அம்பளையாட்கள் இல்லாததால் அவளது பக்கம் வலுவற்று இருந்தது.
நாட்டாமை மலேசியாவுக்கு சிலை கடத்தி காசு சேர்த்த புது பணக்காரன் நடராசன். அம்மா அவனைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள். கள்ள பாஸ்போர்ட்டில் மலேசியா சென்று கடத்தல் வேலை எல்லாம் செய்து பணம் சேர்த்து இங்கேயே வீடு சொத்து எல்லாம் வாங்கி செட்டிலாகிவிட்டான். ஊர்க் கோவிலுக்கு ஒருலட்சம் நன்கொடைகொடுத்ததால் ஊர் நாட்டாமை பதவியும் கொடுக்கப்பட்டது. அவனும் அவன் பொண்டாட்டியும் காட்டும் மினுக்கும் பவுசும் கொஞ்சநஞ்சமில்லை. அவனது பையன் இவன் செட் தான். வெளிநாட்டு சுவிங்கம், தேங்காய் சாக்கலேட் எல்லாம் கொண்டு வந்து தருவான்.
"ஏ குருவம்மா! இப்ப முடிவா என்ன சொல்லுத?", ஊர் நாட்டாமை.
"அந்தப் பையனுக்கே எப்படியாது என் மவள கட்டி வச்சுருங்க. நான் என் தலைய வித்தாவது சீர் செஞ்சுருதேன். ஊரெல்லாம் நாறிப் போச்சு. கல்யாணம் பண்ணி வைக்கலன்னா குடும்பத்தோட மருந்தக் குடிச்சுதான் சாவணும்".
"ஏட்டி! அந்தப் பயலுக்கு அவன் அப்பா ஆத்தா கோவில்பட்டில பொண்ணு பாத்து வச்சுருக்காக. பொண்ணு வீட்டுல அஞ்சு களஞ்சி நகை போடுதாங்க. லோன் போட்டு ஒரு ஆட்டோ வாங்கித் தாராங்க. உன்னால அவ்ளோ ஏலுமா?", என்றான் இன்னொரு ஊர்ப் பெரிய மனுசன்.
"ரெண்டு களஞ்சி போடுதேன். புள்ள பொறந்தா நான் பாத்துக்குடுதேன். அதுக்கு மேல என்னால ஏதும் ஏலாது", என்றாள்.
"குருவம்மா! உனக்கு இந்த சம்பந்தம் எல்லாம் ஒத்து வராது. காதல்தான பண்ணிருக்காங்க. ஊரு ஒலகத்துல பண்ணாததா? கொஞ்ச நாள்ல சரியாயிரும். கடையநல்லூர்ல வேணாம். வெளியூர்ல உன் வசதிக்கு ஏத்த மாதிரி நம்ம சாதியிலேயே ஒரு பையன பாரு. நம்ம கோயில்ல நாங்களே முன்ன நின்னு நடத்தி வைக்கோம்", நாட்டாமை.
"ஏய்யா! அநியாயம் பண்ணாதீங்க. ஆத்தா எல்லாத்தையும் பாத்துகிட்டுதான் இருக்கா. என் மவ வாழ்க்கைய கெடுத்துராதீங்க. நல்லா இருக்க மாட்டீங்க", என்று கத்தினாள்.
"ஏய்! என்னட்டி சாபம் விட்டுகிட்டு இருக்க. எங்களுக்கெல்லாம் சோலி இல்லாமையா இங்க வந்து பேசிட்டு இருக்கோம். ஏலே கோவிந்தா! அஞ்சு ரூவா அபராதத்த குருவம்மாகிட்ட குடுத்துரு. கோயிலுக்கு நூத்தி ஓரு ரூவா உண்டியல்ல போட்டுட்டு வீட்ல சொல்லுத புள்ளைய கட்டிகிட்டு ஒழுங்கா இருக்க வேலை வெட்டிய பாரு. குருவம்மா! நீ வேண்டாத வேலை எதுவும் பாக்காம ஆக வேண்டிய வேலைய பாரு.", என்று முடித்தான்.
குருவம்மாள் ஆற்றாமை தாங்க முடியாமல் அழுதுகொண்டே திரும்பினாள். போலிஸ் ஸ்டேஷன் போனால் ஊரை விட்டு ஒதுக்கு வைத்துவிடுவார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் மண்ணை அள்ளித் தூற்றி கருவிக் கொண்டே வீட்டிற்குப் போனாள். கூடவே மாணிக்கமும் அழுது கொண்டே சென்றான்.
வீட்டில் ஒரு மூலையில் முழங்காலைக் கட்டிக்கொண்டு கருமாரி அழுது கொண்டிருந்தாள். மாணிக்கத்திற்கு அவளைப் பார்க்க முடியவில்லை. அங்கே பேசியவர்கள் மீது ஆத்திரம் பீறிக் கொண்டு வந்தது. 'ரெட்' படத்தில் அஜித் அடிப்பது போல எல்லோரையும் அடிக்க வேண்டும் என்று கையை முறுக்கிக் கொண்டான். அவனால் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்ற ஆற்றாமையில் தரையில் விழுந்து துடித்து அழுதான்.
****
பள்ளிக்கூடத்தில் ஏழாம் வாய்பாடு எழுதிக் கொண்டிருந்தான். மேலத்தெரு மாயாண்டி அண்ணன் வந்து ஆசிரியரிடம் பேசி மாணிக்கத்தைத் தனது சைக்கிளில் அழைத்துச் சென்று பஸ் ஸ்டாண்டில் போட்டுவிட்டு தென்காசிக்கு அழைத்துச் சென்றார்.
தென்காசி தர்மாஸ்பத்திக்குள் நுழையும் போது, "உங்க அக்காளுக்கு வயித்துல கட்டி இருக்கு. ஆபரேசன் பண்ணுதாங்க. உங்க அம்மாவும் இங்கதான் இருக்கு", என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
மூலையில் இருந்த ஒரு சின்னக் கட்டிடத்தின் வாசலின் ஓரமாக அம்மா தலைவிரிகோலமாக அமர்ந்திருந்தாள். மாணிக்கத்தைப் பார்த்ததும் அவனை அணைத்தப் படி கதறி அழத் தொடங்கினாள்.
உள்ளே இருந்து வந்த ஆள் ஒருவர், "எம்மா! உன் மவ பேரு என்ன?", என்றார்.
அழுகையை ஒருகணம் அடக்கிக் கொண்டு "கருமாரி", என்று சொன்னதும் மீண்டும் கதறி அழத் தொடங்கினாள்.
மாணிக்கத்துக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை.